ஓஸ்லோவிலிருந்து காலை 11 மணிக்கு கிளம்பி ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகே நகர வாழ்க்கை முடிந்து, இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் அழகைக்காண முடிந்தது. பாதை வளைந்து, நெளிந்து மலையின் ஏற்றம் துவங்கிவிட்டது. முதல் ஹேர்பின்பெண்டும் ஆரம்பித்துவிட்டது. எனக்கு டென்ஷனும் தான் :( எல்லோரும் "cool, cool mummy" என்று சொன்னாலும், ஒன்றும் நடக்கவில்லை, நல்லபடியாக மலையைக்கடந்து இருட்டுவதற்குள் புக் செய்துள்ள வீட்டை அடையவேண்டும் என்ற கவலைதான்.
பயணத்தைத்தொடர்ந்தோம்.
சின்னப்பிள்ளையில் படித்த மந்திரவாதிக்கதைதான் ஞாபகம் வந்தது, ஏழு மலை, ஏழு கடல் தாண்டி பொக்கிஷத்தை எடுக்கவேண்டும் என்று. அப்படித்தான் நாங்களும் சென்றோம். எப்போதாவது அத்தி பூத்தார்போல் பின்னால் வந்த கார்களையும் அதன்பின் காணவில்லை, போகப்போக மலையும் போய்க்கொண்டிருக்கிறது, ரோடும் மலைகளின் நடுவே வளைந்து, வளைந்து சென்றுகொண்டே...... இருக்கிறது.
கண்ணுக்கெட்டும் தூரம் வரை, எந்த திசையில் திரும்பினாலும் நம் கண்ணுக்கு தெரிந்தது மலை, மலை.... மலை மட்டும்தான். அப்போது தூரத்தில் ஒரு கார் வருவது தெரிந்தது, அனைவருக்கும் காணாததைக்கண்டதுபோல சந்தோஷம் :) மலை ஏறி
எவ்வளவு உயரத்தில்
இருக்கிறோம் என்றே தெரியவில்லை. ஆனால் அவ்வளவு உயரத்திலும் ரோடுகள் சுத்தமாகவும், பராமரிக்கப்பட்டும் இருந்தது. நாங்களும் தோன்றிய இடங்களில் எல்லாம் காரை நிறுத்தி போட்டோ எடுத்துக்கொண்டோம். திடீரென்று மணியோசை காதில் கேட்டது!!!
ஆகா என்னடா இந்த ஆள் நடமாட்டமே இல்லாத மலையில் எங்கிருந்து மணியோசை வருகிறது என்று பார்த்தால் நன்கு கொழுத்த செம்மரி ஆடுகள் புல்மேய்ந்து கொண்டிருந்தன, ஓகே அதையும் விடுவானேன் என்று போட்டோ எடுக்க பக்கத்தில் செல்ல, அதுவரை அமைதியாக மேய்ந்து கொண்டிருந்த ஆடு மே, மே என கத்தி பக்கத்திலிருந்த அதன் ஃப்ரண்ட்ஸ்-ஐம் கூட்டிக்கொண்டு என்னை நோக்கி "விடாதே பிடி" என திருடனை பிடிக்க வருவது போல் தன் கொழுத்த புசு புசு உடம்பை தூக்கிக்கொண்டு குடுகுடுவென 4 ஆடுகளும் என்னை நோக்கி ஓடிவந்தன, போட்டோவாவது ஒன்றாவது "போதுமடா சாமி" என்று போட்டிபோட்டு ஓடிவந்து காரில் ஏறி கதவைச்சாற்றிய பிறகுதான் மூச்சே வந்தது. காரிலிருந்த கணவரும், விபூ, சத்யா ஆச்சிரியமாக அதற்குள் போட்டோ எடுத்துமுடித்துவிட்டாயா? என பார்த்தார்கள், ஏனென்றால் நான் இறங்கி போட்டோ எடுக்கச்சென்றால் குறைந்தது 15 நிமிடமாவது ஆகும் :) நான் வாய்திறந்து பதில்சொல்வதற்குள் நீ ஓன்றும் சொல்லவேண்டாம், நாங்களே சொல்கிறோம் என்பதுபோல 4 ஆடுகளும் என் கார்ஜன்னலில் வந்து மே மே என கத்த ஆரம்பித்துவிட்டது.
எல்லோருக்கும் என்னை பார்த்து ஒரே சிரிப்பு :( அதன்பின் பயணம் முடியும்வரை ஆடுகளைப்பார்த்து விட்டால் போதும் எல்லோரும் உன் ஃப்ரண்ட் வருகிறார் என்று என்னை ஒரே கிண்டல்தான் :) ஆடுகளிடமிருந்து தப்பித்து ஒருவழியாக காரை எடுத்து அங்கிருந்துகிளம்பினோம்.
கொஞ்சம் கொஞ்சமாக மாலையும் நெருங்க ஆரம்பித்துவிட்டது. மலையை சுற்று சுற்று என்று சுற்றி ஒருவழியாக Sirdal ஊருக்கு மாலை 7 மணிக்கு வந்தடைந்தோம். வீட்டிற்கு வந்தபின்தான் அனைவருக்கும் பயணத்தின் களைப்பே தெரிந்தது :) இரவுச்சாப்பாடு சாப்பிட்டுவிட்டு அடுத்தநாள் கியராக் மலை போவதற்கு வழி மற்றும் அதைப்பற்றிய விபரங்களை இண்டெர்நெட்டில் பார்க்க ஆரம்பித்தோம். ஏற்கனவே வீட்டிலேயே என் கணவர் விபூ, சத்யா இரண்டுபேருக்கும் ஒரு வேலை கொடுத்திருந்தார். போகும் இடங்களைப்பற்றிய தகவல்களை ஏற்கனவே நாங்கள் சேகரித்துவைத்திருந்தாலும் அவர்களும் படிக்கவேண்டுமென்பதற்காக, ஆளுக்கொருநாள் போகுமிடம், அதைப்பற்றிய சிறிய குறிப்பு, அந்த இடத்தில் முக்கியமாக பார்க்கவேண்டியவை என மற்றவர்களுக்கு சொல்லவேண்டும். அதன்படி அன்று சத்யா கியராக் மலை பற்றி ஒரு சிறு லெக்ட்சர் கொடுத்தான், அந்தக்கனவிலேயே தூங்கச்சென்றோம்..............
பயணம் தொடரும்..................
சூப்பர், செல்வி. இன்னொரு ச்விஸ் ட்ரிப் போல இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். படங்களும் அருமை!
ReplyDeletesuperb descriptions... more like as we are doing a journey together... keep on writing ka..
ReplyDelete--- Valli
Thanks, Ammu :) somehow i missed to reply;) waiting for more comments from you:)
Delete