Tuesday, September 25, 2012

கோடைவிடுமுறை நார்வே: Tjørhom- 15.08.12

முதல் நாள் பயணம்
கப்பல் கொஞ்சம், கொஞ்சமாக நகர ஆரம்பித்தவுடன் கூட்டமும் கப்பலின் மேல் தளத்திலிருந்து கலைய ஆரம்பித்தது. நாங்களும் கிளம்பி கப்பலை நவக்கிரஹத்தை சுற்றுவது போல் எல்லா தளத்திற்கும் சென்று சுற்றி பார்த்து விட்டு, களைப்பை போக்க கேக், காபி, ஐஸ் என்று சாப்பிட்டு விட்டு, அறைக்குச்சென்று குளித்து ரெடியாகி முன்பே புக் செய்திருந்தபடி இரவு 08.30-க்கு, இரவுச்சாப்பாடு புஃப்பே- க்கு (Dinner Buffet) ஜன்னலோரத்து டேபிளில் அமர்ந்தோம். சூரியன் மறையும் அழகை ரசித்துக்கொண்டும், அங்கு கடைவிரிக்கப்பட்டிருந்த எண்ணற்ற உணவு வகைகளில் எதைச்சாப்பிடுவது
எதைவிடுவது என்று தெரியாமல் ஒருத்தரை மாற்றி ஒருத்தரையும், மற்றவர்களை பார்த்து கேலி செய்தும், சிரித்தும், ஆனாலும் வயிறு முட்ட சூப், மீன், கோழி, உருளைக்கிழங்கு, ரைஸ், நூடுல்சாலட், வகைவகையான பழங்கள் கடைசியாக சாக்லெட், வெண்ணிலா புட்டிங் என்று ஒன்றையும் விடாமல் சாப்பிட்டு விட்டு 10:30 மணிக்கு ஓட்டலை விட்டு நடக்க முடியாமல் உருண்டு உருண்டு நால்வரும் வெளியில் வந்தோம்.
அப்படியே போய் படுக்க முடியாது என்ற நிலைமை எல்லோருக்கும், என்னசெய்வது  கப்பலில் வாக்கிங் போக வேண்டியதுதான் என்று திரும்பவும் கப்பலின் கீழ்தளத்திலிருந்து மேலே கீழே என்று நள்ளிரவு 12மணிவரை சுற்றிவிட்டு, போட்டோவும் எடுத்துவிட்டு அறைக்குவந்து அசந்து நன்றாக தூங்கினோம். அடுத்தநாள் காலை எழுந்து, குளித்து ரெடியாகி கப்பலின் 14-வது மாடிக்குச்சென்றேன். கப்பலும் ஓஸ்லோவை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லோரும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என எல்லாத்திசைகளிலும் மாற்றி மாற்றி போட்டோ எடுத்தார்கள், நானும் தான் :) ,எப்போதும் லேட்டாக எழுந்திரிக்கும் நான் :( இதற்காகவே முதல் ஆளாக எழுந்து ரெடியானேன்.  
ஒருவழியாக காத்திருந்தநேரமும் வந்தது, ஒஸ்லோ கண்களில் தெரிய ஆரம்பித்தது. எல்லோரும் கைதட்டி அவரவர் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்கள். அறைக்குச்சென்று மூட்டைமுடிச்சுக்களை எடுத்துக்கொண்டு வேகவேகமாக கப்பலின் அடித்தளத்திற்கு கார்பார்க்கிங் நோக்கிச்சென்றோம். கப்பலும் ஒஸ்லோவை குறிப்பிட்ட நேரத்திற்கு காலை 10 மணிக்கு சென்றடைந்தது. ஓவ்வொறு காராக வெளியில் செல்ல ஆரம்பித்தது. வெளியில் வந்தால் கஸ்டம்ஸ் செக்கிங் வேறு, சில கார்களை அக்குவேர் ஆணிவேராக எல்லா லக்கேஜையும் வெளியில் எடுத்து சூட்கேஸ்களையெல்லாம் பிரிக்கச்சொல்லி செக் பண்ணிக்கொண்டிருந்தார்கள். முதல்நாள் கார்பார்க்கிங்கிலேயே ஒரு செக்கிங் முடிந்து, யார் யார் கஸ்டம்ஸ் கிளியர் செய்யவேண்டும் என்று காரில் ஸ்லிப் வைத்திருப்பார்கள் போல, அவர்களுக்கென்று தனியாக கியூ இருந்தது. எங்களிடம் டிரஸ்ம், சாப்பாடும் தான், பெரிதாக கிளியர் பண்ணுவதற்கு வேறுஒன்றும் இல்லை, இருந்தாலும் நார்மல் கியூவில் நின்று எல்லாவற்றையும் முடித்துவெளிவருகையில் 11மணியாகிவிட்டது. கலர்லயன் கப்பலுக்கு டாடா பை பை சொல்லி, அடுத்தகட்டமாக நாங்கள் புக் செய்திருந்த தங்குமிடம் டிஜோர்ஹோம் நோக்கி 390 கிமீ பயணத்தை துவங்கினோம். 
கூகுல் 390 கிமீ-க்கு 6 மணிநேரம் காட்டியது. இதுவே ஜெர்மனியாக இருந்தால் என் கணவர் 3 மணிநேரத்திலே சென்றிருப்பார், ஆனால் நார்வே ஆயிற்றே !!! கொஞ்சம் வயிற்றுக்கும் கொடுத்துவிட்டு பயணத்தை துவக்கினோம். கூகுல் சொன்னதோ 6 மணிநேரம், ஆனால் எங்களுக்கு அதைவிட கூடவே நேரம் எடுத்தது. ஆச்சரியமாக இருக்கிறதா ??? போகும்வழியெல்லாம் அவ்வளவு கொள்ளை அழகுடன் இருந்தது, எங்களால் நிறுத்தாமல் இருக்கமுடியவில்லை....
                                                                                                               
                                                                                                               பயணம் தொடரும் :) ....

1 comment: